Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை,மார்ச்.25: சென்னையை பொறுத்தவரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை ரூ.5.07 கோடி அளவிலான பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகபட்சமாக ரூ.50,000 ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்லலாம். அதற்கு மேல் பணத்தை கையில் எடுத்துச் சென்றால் உரிய ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். அதேபோல நகை உற்பத்தி செய்யும் நகைக்கடை உரிமையாளர்களும் உரிய ஆவணத்தோடு நகைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.இதனிடையே, பூந்தமல்லி அருகே புதுச்சத்திரம் பகுதியில் வந்த கார் ஒன்றை, தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர்.
அப்போது, காரில் ரூ.96 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பூந்தமல்லி பகுதியில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் ரூ.2 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, நேற்று முன்தினம் மாலை வரை தமிழ்நாடு முழுவதும் ரு.12 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக மாநில தலைமை தேர்தல் அதிகார் சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.